வவுனியா நெடுங்கேணி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸாரின் வண்டி வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது. குறித்த சம்பவம் இன்று மாலை நெடுங்கேணி நகரப்பகுதியில் இடம்பெற்றது.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்று மாலை முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்து வீட்டிற்குள் சென்று விபத்திற்குள்ளாகியது.
இதனால் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்ததுடன், வீட்டு உரிமையாளரது மோட்டார் சைக்கிளும் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் வாகனமும் சேதமடைந்துள்ளது.
இதேவேளை குறித்த வீட்டில் தனியார் வகுப்புக்கு வந்த 20க்கு மேற்பட்ட சிறுவர்கள் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது முன்பு குழுமியிருந்த நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பே வீட்டின் உட்பகுதிக்கு சென்றிருந்தமையினால் உயிர் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை வாகனத்தை புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே செலுத்தி வந்ததாகவும், அவரும் ஏனையோரும் மதுபோதையில் இருந்ததாக வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.