முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற நிலமை ஏற்ப்பட்டுவிடும்.
எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள்.
எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொது விடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்ப்படுத்த வேண்டும். அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
அத்துடன் பெருவாரியான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி பேசியபோது ஒருமணிகூட வெளியில் இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று நிலைமைமாறி இறக்குமதிசெய்யும் சூழல் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர்.
எனவே இந்தநிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்ப்படும். எனவே அரசாங்கம் நிதானமாக செயற்ப்பட வேண்டும். இன்று சாதாரணமக்கள் கூட தேங்காய் வாங்க முடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்றவேண்டும் என்றார்.