காலையில் இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி வேர்க்கடலை சட்னியை செய்யும் பழக்கம் உள்ளதா? அந்த வேர்க்கடலை சட்னியை வித்தியாசமான சுவையில் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் வேர்க்கடலையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்தால் வீட்டில் உள்ளவர்கள் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு வேர்க்கடலை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் – 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை – 50 கிராம்
* பெரிய வெங்காயம் – 3 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் – 10
* கறிவேப்பிலை – சிறிது
* பூண்டு – 4 பல்
* வரமிளகாய் – 6
* புளி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் – 1/4 கப்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, வரமிளகாய், சிறிது புளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைத்து மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கடைசியாக தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை கார சட்னி தயார்.











