விவசாய உற்பத்திகள் மற்றும் உள்ளீடுகளை விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனம் ஒன்று நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் இன்றைய தினம் சீல்வைக்கப்பட்டது.
குறித்த நிறுவனத்தில் தரமற்ற தானியங்கள் உள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று காலை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் உள்ள குறித்த நிறுவனம் அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்டது.
இதன்போது தரமற்ற வகையில் காணப்பட்ட பச்சைபயறு ஒரு தொகை மீட்கப்பட்டது.
அத்துடன் இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த திரவப்பசளை ஒரு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் தரம் தொடர்பாக ஆராய்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் பரிசோதனைகள் முடிவடையும் வரை அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதுடன் அவ் நிறுவனம் சீல்வைத்து மூடப்பட்டது.
இதேவேளை நாளையதினம் குறித்த களஞ்சியத்தை சுகாதார பரிசோதகர்களும் பார்வையிட்டு ஆய்வுசெய்யவுள்ளனர்.
இன்றைய நடவடிக்கையின் போது மாவட்ட அரசஅதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் தி.திரேஸ்குமார், உரச்செயலகத்தின் பிரதிப்பணிப்பாளர் பந்துலவிஜயவர்த்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சமூகமளித்திருந்தனர்.











