தனியார் கல்வி நிறுவனங்களின் நேரங்களை மட்டுப்படுத்தியதன் நோக்கமானது பிள்ளைகளை கலை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கேயாகும் யாழ்ப்பாண மாவட்டசெயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட இலக்கிய விழாவானது உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்கள் தமது பாடசாலை பருவத்தில் கலை இலக்கிய போட்டிகளில் பங்குபற்றுவதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல கலைஞர்களாக உருவாகுவதற்கு வழிவகுக்கின்றது.
அதற்கு இந் நிகழ்வும் எடுகோளாக அமைகின்றது. அதற்காக உழைத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
பிள்ளைகள் தனித்தே புத்தகப் பூச்சிகளாக மட்டும் இருக்காமல், கலை இலக்கியங்களிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் உறுதுணையாகவிருக்க வேண்டும் .
தனியார் கல்வி நிறுவனங்களின் நேரங்களை மட்டுப்படுத்தியதன் நோக்கமானது பிள்ளைகளை கலை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கேயாகும்.
இதன் மூலம் பிள்ளைகளுக்கு மன ஆரோக்கியம் ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் தம் வாழ்க்கையில் நல்ல உயர்வுகளை அடையமுடியும்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டி யில் எமது மூத்த கலைஞர்கள் பங்குபற்றியதும் சிறப்பான விடயம்.
மூத்த கலைஞர்கள் வளரும் கலைஞர்களுக்கு பக்கபலமாகவிருக்க வேண்டும். எமது யாழ்ப்பாண மாவட்டமானது கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு முதன்மையான மாவட்டம் ஆகும்.
மாவட்ட மற்றும் பிரதேச பண்பாட்டு விழாக்களுக்கு மேலதிகமாக கிராம ரீதியில் கலை இலக்கிய போட்டிகளையும் சிறு விழாக்களையும் நடாத்தி மேன்மேலும் கலைகளை வளர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.
அதற்கு மூத்த கலைஞர்கள் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிக அவசியமானது என மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், மாணவர்களின் கதை சொல்லுதல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பாடல் நயத்தல், மற்றும் ஆங்கில கவிதை போன்றவை சிறப்பாக நடைபெற்றதனைத் தொடர்ந்து, கலாச்சார அலுவலக திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டிருந்தனர்.