அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (7) இடம்பெற்றது.
வரிப் பணம் உட்பட பல்வேறு அரச கொடுப்பனவுகளை ‘GovPay’ தளத்தின் ஊடாக மக்கள் நேரடியாக செலுத்த முடியும். 16 திணைக்களங்களையும் 50 சேவைகளையும் உள்ளடக்கிய வகையில் ஆரம்பகட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் 30இற்கும் அதிகமான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருதும் இவ்வருட இறுதிகள் பெரும்பாலான அரச நிறுவனங்களை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.
இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.
இதனூடாக, ஜனாதிபதி நிதி சேவைகளை பிரதேச செயலகங்களுக்கு விரிவுபடுத்துதல் மற்றும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் (EBMD) வசதிகளை அறிமுகப்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இராஜதந்திர பணிகள் மூலம் சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெறுவதை சாத்தியமாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.