கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம். அவர்கள் அனுமதி தந்த பின்னர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளுக்கு போட்டிபரீட்சை மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான வேலைகளை துரிதபடுத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரியில் இன்று வியாழக்கிழமை(13) ஆளுநர் மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அவரை சந்தித்து ஜனாதிபதியிடம் அரச நியமனங் கோரிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன் போது ஆளுநர் விசேடமாக கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். அதேவேளை நிதி அமைச்சர் அனுமதியளித்த 375 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியுள்ளோம். எனவே கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் நியமனங்களை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கோரிக்கையடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக தெரிவித்தார்.
இதேவேளை ஆளுநரை சந்தித்த பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவிக்கையில் ஆளுநரிடம் பட்டதாரிகளின் கோரிக்கையடங்கிய மஜகரை வழங்கியுள்ளோம். அதன்போது கிழக்கில் 3 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு போட்டி பரீட்சை நடாத்தவுள்ளதாகவும் அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஆளுர் வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.