அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதி அரசடிபகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20) மாலையில் இடம்பெற்றுள்ளயதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
ஆலையடிவேம்பு சாயிராம் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய பவிகாஸ் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவராசா விதுஷ்சன் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.
அம்பாறையல் இருந்து அக்கரைப்பற்று அலையடிவேம்பிலுள்ள வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சம்பவதினமான நேற்று மாலை 3.00 மணிக்கு பிரயாணித்தனர். இதன்போது அரசடி பகுதியிலுள்ள வளைவில் அக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நோக்கி பிரயாணித்த கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.