உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் – இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் வாகன விலைகள் வியத்தகு முறையில் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
CHR அல்லது Vezel போன்ற வாகனங்கள் இலங்கையில் விற்கப்படும் விலையில் உலகின் எந்த நாட்டிலும் விற்கப்படுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு வரி வசூலிக்கும் நாடு வேறு எதுவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் ஒரு மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை, நியூசிலாந்திற்கு 20 வீத வரியில் இறக்குமதி செய்கிறோம். அதன் மதிப்பு 12 லட்சம். அதே வாகனத்தை பங்களாதேஷில் 50 வீத வரியுடன் இறக்குமதி செய்யும் போது அதன் மதிப்பு 1.5 மில்லியன் ஆகின்றது.
ஆனால் இலங்கையில் 200 வீதம் வரி விதிக்கப்படுவதால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் இலங்கை மூன்று மில்லியன் ரூபா பெறுமதியுடையதாக மாறுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், கூடுதல் சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகொட தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டு, பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம், தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல் காரணமாக, இறக்குமதி செய்யப்பட்ட பல வாகனங்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்க அனுமதிக்கப்படவில்லை.
நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அந்தத் தடைகளை நீக்கி சமீபத்தில் விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, தொடர்புடைய வாகனங்களை விடுவிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சுமார் மூன்று கப்பல்களில் வந்த சுமார் 500 வாகனங்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.