யாழ்ப்பாணம் , காங்கேசன்துறையில் மிக விரைவில் எரிபொருள் களஞ்சிய சாலையில் எரிபொருட்களை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு இடம்பெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு புகையிரதத்தில் எரிபொருட்களை எடுத்து வருவதற்கான முயற்சிகளையும் விரைவில் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிகழ்வில் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தேசிய மக்கள் சக்தியின் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.