திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதி பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நடைபெறவுள்ளதனால் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் அறிவித்துள்ளார்.
அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இப் பிரதேசத்தின் மிக நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்குடன் திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் நல்லூர் பிரதேச சபையினால் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இச் செயற்றிட்டத்தின் முக்கிய கட்டமாக குறித்த பகுதிக்கு காப்பெற் இடும் பணிகள் நாளைய தினம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை (11.06.2026) ஆகிய இரு நாட்களும் இடம்பெறவுள்ள நிலையில் பின்வரும் விடயங்களை இப்பிரதேசத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
இரு தினங்களும் குறித்த வீதிப்பகுதியானது போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
தங்களது வியாபார நிலையங்களுக்கு முன்னால் எந்த ஒரு வாகனங்களும் நிறுத்தப்படல் ஆகாது
காப்பெற் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் குறித்த வீதிப்பகுதியானது உயர் அழுத்தம் கொண்ட காற்றுப் பம்பிகளைக் கொண்டு சுத்தம் செய்யபடும்.
அவ்வாறு சுத்தம் செய்யப்படும் போது எழுகின்ற தூசி மண்டலத்திருந்து தங்களது வியாபார நிலையங்களையும் வியாபர பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு பொருத்தமான தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
முக்கியமாக உணவுக் கடைகள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வண்ணம் தங்கள் வியாபார நிலையங்களின் சுகாதாரம் இது தொடர்பில் மிகக் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
தங்களுடைய வியாபார நடவடிக்கைகளுக்கு மிக நீண்ட கால இடையூறு ஏற்படாத வண்ணம் ஒரு திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக இச் செயற்றிட்டம் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது.
இதுவரை நாளும் தாங்கள் வழங்கிய ஒத்துழைப்பு போன்று இவ்விறுதிக் கட்டப்பணிகளுக்கும் தங்களுடைய பூரண ஒத்துழைப்பினை தந்துதவுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.











