கியூபெக் மாகாண அரசு தன்னச்சையாகத் தனது அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கியூபெக்-லாப்ரடார் பழங்குடியினத் தலைவர்களின் சம்மேளனம் (AFNQL) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான எங்களின் அனுமதியின்றி கியூபெக் தன்னை ஒரு தனி நாடாகவோ அல்லது பிரெஞ்சு மொழியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகவோ அறிவிக்க முடியாது" என அவர்கள் முழங்கியுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தை ஆளும் சி.ஏ.க்யூ (CAQ) அரசு, அண்மையில் கனடிய அரசியலமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன்படி, கியூபெக் ஒரு "தேசம்" என்றும், அங்கு பிரெஞ்சு மொழி மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி என்றும் அறிவித்தது.
இதனை எதிர்த்தே தற்போது 43 பழங்குடியின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஐரோப்பியர்கள் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்பே தாங்கள் இங்கு வாழ்ந்து வருவதாகவும் தங்களைக் கலந்தாலோசிக்காமல் மாகாண அரசு முடிவுகளை எடுப்பது தங்களை அடிமைப்படுத்துவதற்குச் சமம் என பழங்குடியினத் தலைவரான கிஸ்லைன் பிகார்ட் (Ghislain Picard) தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் கடும் மொழிச் சட்டமான 'பில் 96' காரணமாக, பழங்குடியின மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது எனவும் இது அவர்களின் பாரம்பரிய மொழிகளுக்கும், கல்வி வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதாகவும் பழங்குடியினங்களைச்
சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பழங்குடியின உரிமைகள் பிரகடனத்தின்படி (UNDRIP), பூர்வகுடி மக்களின் நிலம் சார்ந்த முடிவுகளில் அவர்களின் முழுமையான சம்மதம் இன்றி எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் கருத்துரைத்த, கியூபெக் நீதித்துறை அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், தனது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள கியூபெக்குக்கு முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






