இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா தனது பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மனுவில், விதிமீறலில் ஈடுபட்டதற்காக இளையராஜாவைச் சிறையில் அடைக்கவும், அவரது அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது.
அத்துடன், பறிமுதல் செய்யப்படும் சொத்துகளை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைத் தங்களிடம் ஒப்படைக்க அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு உரிமை கொண்டாடவோ, அவற்றைப் பயன்படுத்தவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என பிப்ரவரி 13 அன்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஜூலை 1 அன்று அந்தத் தடையை உறுதி செய்திருந்தது.
திரைப்படத் தயாரிப்பாளர்களிடமிருந்து அந்தப் பாடல்களின் முறையான பதிப்புரிமையைப் பெற்றுள்ளதாகச் சரிகம தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நீதிமன்றத் தடையையும் மீறி அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோசாவன், ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் இளையராஜா தரப்புப் பட்டியல்களின் கீழ் அந்தப் பாடல்கள் தொடர்ந்து கிடைக்கப்பெற்று வருவதாகச் சரிகம குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சரிகம நிறுவனத்தின் புகாருக்குப் பதிலளிக்குமாறு இளையராஜாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.











