உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள ரஷ்யப் படைகளால் நிர்வகிக்கப்படும் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு டீசல் எரிபொருள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய அரச அணுசக்தி நிறுவனமான ‘ரொசாட்டம்’ (Rosatom) அமைப்பின் தலைவர் அலெக்சி லிகச்சேவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அணுமின் நிலையத்தின் வெளிப்படை மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில், உலைகளில் உள்ள அணுசக்தி எரிபொருளைக் குளிரூட்டும் பணிக்கான டீசல் ஜெனரேட்டர்களுக்கு இந்த எரிபொருள் மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான தாக்குதல்கள் மூலம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உக்ரைன் திட்டமிட்டு ஆபத்துக்குள்ளாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான இது, 2022ஆம் ஆண்டு ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய ஆரம்ப வாரங்களிலேயே ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் குறித்து உக்ரைன் தரப்பில் இருந்து உடனடி பதில்கள் எதுவும் வெளியாகவில்லை.











