தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் பயின்ற 81 வயதான அஸ்கரலி வோஹ்ரா என்பவரே இவ்வாறு பிரதமரைச் சந்தித்து உதவி கோரியுள்ளார்.
மும்பை பயந்தர் கிழக்கு நவகார் பகுதியில் அமைந்துள்ள சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை அஸ்கரலி வோஹ்ரா கடந்த 1989ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாகப் பதிவு செய்து வாங்கியுள்ளார்.
எனினும், கடந்த 2011ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் தனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனக்குத் தெரியாமல் நிலத்தைப் பிரித்து, ‘ஸ்வயம் பில்டர்ஸ்’ மற்றும் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஆகிய இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நில ஆக்கிரமிப்பில் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் தொடர்புள்ள பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தாவுக்குத் தொடர்பு இருப்பதாக வோஹ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடமும் காவல் நிலையங்களிலும் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையிலேயே, கடந்த செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வோஹ்ரா, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
பிரதமருடனான இச்சந்திப்பைத் தொடர்ந்து உள்ளூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக வரும் செப்டம்பர் 16ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ‘ஸ்வயம் பில்டர்ஸ்’ மற்றும் ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.











