வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான “மரபுரிமைப் பயணம்” நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணக் கோட்டை முனீஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து, நாளைய தினம் வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் பயணம் ஆரம்பமாகி , துணைவி பிரகேஸ்வரன் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம், சாவகச்சேரி வாரிவரனேஸ்வரம் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று இறுதியாக பூநகரி மண்ணித்தலை சிவாலயம் சென்றடையவுள்ளது.
குறித்த பயணத்தில் இணைபவர்களுக்கு , போக்குவரத்து வசதிகள் , உணவு உபசாரங்கள் வழங்கப்படவுள்ளது.
இப்புனித சிவ தரிசனப் பயணத்தினை தொல்லியல் திணைக்களம், வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் இராஜ இராஜேந்திர சுவாமிகள் ஆகியோர் இணைந்து மிகச் சீராக ஒழுங்கமைத்துள்ளனர்.
சோழர் காலத்து ஆன்மீகப் பெருமையையும், நமது பாரம்பரிய மரபுரிமைகளையும் போற்றிப் பாதுகாக்கும் இந்த வரலாற்றுப் பயணத்தில் ஆன்மீகப் பற்றாளர்களையும், பொதுமக்கள் அனைவரையும் அன்போடு கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.











