தென்மேற்கு டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில், சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்த தனியார் தங்கும் விடுதி (PG) கட்டிடம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது.
கல்லூரி மாணவர்கள் அதிகம் வசிக்கும் இந்தப் பகுதியில் மதியம் 1:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் பல மாணவர்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இடிந்து விழுந்த கான்கிரீட் கூரையின் கீழ் சிக்கியிருந்த ஒருவரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், எஞ்சியவர்களை மீட்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், விபத்துக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.











