ஆஸ்திரேலியாவின் முன்னணி நகரமான சிட்னியில் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.
இதனால் நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் வெப்பநிலை திடீரென 33 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.
இது ஆண்டின் இந்த காலக்கட்டத்தில் பதிவாகும் இயல்பான சராசரி வெப்பநிலையை விட 13 டிகிரி செல்சியஸ் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிட்னி சர்வதேச விமான நிலையப் பகுதியில் காலையிலேயே 28.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி அப்பகுதி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது.
இந்த திடீர் வெப்பநிலை உயர்வுடன் வடமேற்கில் இருந்து வறண்ட மற்றும் பலத்த காற்று வீசி வருவதால், நகரம் முழுவதும் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.
இதன் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாநில தீயணைப்புத் துறை அதிகாரிகள் சிட்னி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளியில் தீ மூட்டுவதற்கு முழுமையான தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கத் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.











