தென் கொரியாவில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காணாமல் போயுள்ளதாகக் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கொரியாவின் ஜெஜூ தீவிலிருந்து 24 கிலோமீற்றர் தொலைவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மீன்பிடி படகில் இருந்த 27 பணியாளர்களில், 15 பேர் மீட்கப்பட்டனர். அதில் இரண்டு தென் கொரிய பிரஜைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காணாமல்போயுள்ளனர். அவர்களில் இருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல்படை, காவல்துறை, தீயணைப்பு படை மற்றும் இராணுவம் ஆகியவற்றின் 11 கப்பல்கள், 9 விமானங்கள் மற்றும் 13 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.











