யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் இன்று 18.06.2024 புதிதாக சிறுவர், பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இன்று மதியம் 1.00. மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் காங்கேசன்துறை காவல் கண்காணிப்பாளர் எம். டபிள்யு. சந்தானகமகே கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட சிறுவர் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அச்சுவேலி, தெல்லிப்பளை, வல்வெட்டித்துறை, இளவாலை, நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் த.தங்கரூபன், போலீஸ் பாதுகாப்பு குழுவினர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், கிராம சேவகர்கள், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
பருத்தித்துறை போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருந்த வடமராட்சி கிழக்கின் வலிக்கண்டி முதல் குடாரப்பு வரையான 8. கிராம சேவகர் பிரிவுகளும் சில மாதங்களுக்கு முன்னர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும் இக் கிராம சேவகர் பிரிவுகள் வழமைபோன்று பருத்தித்துறை நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு தற்போது பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.





