25 சதவீத மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களில் 1,800 மருத்துவர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி சூழல் ஏற்படுவதற்கு முன்னர் 200 மருத்துவர்களே வெளிநாடுகளுக்கு இடம்பெயரவிருந்ததாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களில் காணப்பட்டன.
எனினும் தற்போது 25 சதவீதமான மருத்துவர்கள் வெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கான தேர்வுகளில் சித்தியடைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
இது எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார சேவையினை மிகவும் பாதிக்கும்.
வைத்தியர்களுக்கான கொடுப்பனவு குறைந்தளவில் வழங்கப்படுவதே இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தை கருத்திற்கொண்டு வினைத்திறனுடன் செயற்பட்டால் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்களையும் நாட்டிற்கு மீள அழைக்க முடியும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.