கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்க்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறையை கண்டித்து அதற்கான தீர்வுகோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று திங்கட்கிழமை (24) பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட அதன் வெளிக் கதவை பூட்டு போட்டு பூட்டியும் கல்முனை நகரின் 3 பிரதான வீதிகளை மறித்து 6 மணித்தியாலம் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் கலகமடக்கும் பொலிசார் வரவழைக்கப்பட்டதுடன் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
கல்முனை பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறிக்கபட்டதையடுத்து அந்த அதிகாரங்களை வழங்குமாறு கோரி கடந்த 92 நாட்களாக பிரதேச செயலகத்தின் முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 92 நாட்களாக இந்த போராட்டத்திற்க்கு பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு பிரதேச செயலகத்தின் முன்வாசல் கதவிற்கு பூட்டு போட்டு பூட்டி பிரதேச செயலகத்துக்குள் உட்செல்ல விடாது போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு கடமைக்கு சென்ற உத்தியோகத்தர்கள் உள்நுழைய முடியாது காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
அதேவேளை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி, கல்முனை அக்கரைப்பற்று வீதி, கல்முனை நாவிதன்வெளி வீதிகளான மூன்று பிரதான வீதிகளின் சந்தியில் வீதியை மறித்து வீதியில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து நகரில் இருந்து வாகனங்களில் வெளியேறவே வெளியில் இருந்து வாகனங்கள் நகருக்குள் செல்ல
முடியாததையடுத்து வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் பிரதான வீதிகளின் ஊடான சகல போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு கலகம் அடக்கும் பொலிசார் தண்ணீர் பீச்சும் வாகனங்கள் கொண்டுவரப்பட்ட்டு பலத்த பாதுகாப்பில் பொலிசார் ஈடுபட்டனர். இருந்தபோதும் மக்கள் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் வீதியில் அமர்ந்து பல கோரிக்கைளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக நா.உறுப்பினர்களான சி.சிறிதரன், எஸ்.கஜேந்திரன், முன்னாள் நா.உறுப்பினர்களான பா.அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், கோடிஸ்வரன். மற்றும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை இந்த வீதி மறியல் போராட்டத்தையடுத்து கல்முனை தமிழ் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையை புறக்கணித்தனர்.
இதனையடுத்து போராட்டகாரர்களிடம் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் போராட்டத்தில் ஈடுபடுமாறு பொலிசார் கோரினர். இதனை போராட்டகார்கள் ஏற்க மறுத்ததுடன் அரசாங்க அதிபர் இங்கு வந்து பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்களை வழங்கல் தொடர்பாக உத்தரவாதம் தரவேண்டும்.
தொடர்ந்து தினம் தினம் இந்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர் எனவே எங்கள் சொத்தான பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்களை வழங்க வேண்டும் அல்லது இந்த பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 29 கிராமசேவகர் பிரிவிலுள்ள மக்கள் அனைவரையும் கொல்லுங்கள் தீர்வு தரும்வரை இங்கிருந்து நகரமாட்டோம் என பொலிசாருக்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசாங்க அதிபர் இது தொடர்பாக பேசுவதற்கு தனது காரியாலயத்துக்கு 5 பேரை வருமாறும் கோரிய நிலையில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து பகல் 1.30 மணிவரை 6 மணித்தியாலம் இடம்பெற்ற இந்த வீதிமறியல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து போராட்டகாரர்கள் விலகிச் சென்றனர்.