தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஏற்பாடு செய்த மீனவர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் இன்றைய தினம்(29) மன்னாரில் இடம் பெற்றது.
இலங்கை மற்றும் இந்திய அரசு கச்சதீவு விடயம் குறித்து இரு நாட்டு மீனவர்களையும் பாதிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இதன்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி வருகின்றமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன்குமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட ஒரு ஒப்பந்தம் உள்ளது.அதற்கு மேலாக சர்வதேச கடல் எல்லை சட்டமும் உள்ளது.
இதனை மீறியும் சட்டத்தை மதிக்காமலும் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னும் ஒரு நாட்டு கடற்படரப்பினுல் அத்து மீறி நுழைகின்றமை ஒரு பார தூரமான விடயமாகும்.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் புதிதாக கொண்டு வரப்படவுள்ள மீனவர்களின் உத்தேச சட்டத்தின் படி வெளிநாட்டு படகுகளும் இலங்கை கடல் பரப்பில் வந்து கடல் தொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்திய மீனவர்கள் சட்ட ரீதியாக இலங்கை கடற்பரப்பினுல் மீன் பிடிக்கக் கூடிய நிலை ஏற்படும்.
இப்புதிய சட்டத்தினால் எமது கடல் வளம் சிதைக்கப்படும்.இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் எமது நாட்டிற்கு ஒரு இறையாண்மை மற்றும் சுய ஆட்சி போன்றவை உள்ளன.
இவற்றை பிற நாடுகளும் சர்வதேசமும் மதிக்க வேண்டும் என்பதையே நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.





