தமிழர்களின் உரிமையை வெல்வதற்காக தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த ஒரு மாமனிதர் சம்பந்தன் ஜயா அந்த ஒரு தூணில் தான் கட்சி நின்றது அந்த தூண் சாய்ந்துவிட்டது. அவருக்கு ஆழந்த அனுதாபங்கள் அதேவேளை தலைவர் பிரபாகரனின் இழப்பை தாங்கி கொள்ள முடியாது. இன்றும் எனது அடிமனதில் அவரின் எண்ணங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என கருணா அம்மான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு 100 பேருக்கு பண உதவிகளை வழங்கிவைத்த கட்சியின் தலைவரும், முன்னனாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் முரளீதரன் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
பணம் உள்ளவர்களிடம் உண்மையில் தமிழ் உணர்வு இல்லை, அவர்கள் உதவி செய்ய முன் வரவில்லை பணம் இல்லாத மக்கள் தான் அக்கறையாக இருக்கின்றனர். அந்த மக்களை பாராட்ட வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான போராளிகள் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதேபோன்று பல்லாயிரக்கணக்கான போராளிகள் அங்கவீனமாகவும் வாழ்வாதாரம் அற்ற நிலையில் கணவனை இழந்த பல்லாயிரக்கணக்கான போராளி குடும்பங்கள் வடக்கு கிழக்கில் ஒரு வேதனையான கட்டத்தில் தான் இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.
அதற்கு ஒரு அத்திவாரமாக ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த கட்டமைப்பை ஆரம்பித்ததுடன் எங்களது போராளிகளை முதன்மைபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக கட்சியையும் ஆரம்பித்தோம்.
அதற்கான பல முயற்சிகளை செய்தோம் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய பங்காற்றியவர் கட்சிஉப தலைவர் ஜெயாசரவணன் அவர் வெளிநாடுகளுக்கு சென்று பல முயற்சிகளை எடுத்து இன்று அந்த நிலையை அண்மித்துள்ளோம்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால பொது தேர்தலில் நான் முதல் முதலில் போட்டியிட்டேன். மக்கள் 35 ஆயிரம் வாக்குகளை அளித்தனர் ஆனால் வெற்றிபெற முடியாமல் போனது சுமார் 4 ஆயிரம் வாக்குகள் செல்லுபடியானதால் இருந்தும் அது பாரிய வெற்றி.
அந்த மாவட்டத்தில் 55 ஆயிரம் வாக்குகள் அதில் 35 ஆயிரம் வாக்குகளை அளித்துள்ளனர் அந்த நம்பிக்கையை பாராட்ட வேண்டும் அதிகாரம் கிடைத்திருந்தால் பாரிய வேலைதிட்டத்தை செய்திருக்கலாம் இருந்தாலும் எமது முயற்ச்சி வெற்றியடைந்துள்ளது.
எமது கட்சி இலங்கையில் வாழுகின்ற தமிழர்களுக்கான கட்சி வன்னியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் எமக்கு பின்னால் அணிதிரண்டு கொண்டிருக்கின்றனர். இப்போது போராளிகளின் முகங்களை பார்க்கின்ற போது பழைய ஞாபங்கள் வருகின்றது. களத்தில் திரிந்து போராடிய காலங்கள் ஒன்றாக உணவு உண்டு வாழ்ந்தோம். இவ்வாறு எம் கண்முன் மரணித்த போராளிகளை நினைக்கின்ற போது முடிவு காணும்வரை நாங்கள் இருக்க வேண்டும்.
தலைவருக்கும் உனக்கும் இடையே பேச்சுவார்த்தை அடிப்படையில் நடந்த சிறு பிரச்சனையை பூதகரமாக்கி அதில் எத்தனையே பேர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தலைவரின் இழப்பை இன்று நான் நினைத்து பார்க்கின்றேன். என்னால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை நான்தான் அவரின் உடலை அடையாளம் காட்டினேன் அவர் சடலமாக படுத்திருந்தபோது அது பாரிய வேதனையாக இருந்தது.
இன்று எத்தனையோ பேர் முதலைக் கண்ணீர்வடித்துக் கொண்டு தலைவரின் பெயரை விற்று வெளிநாடுகளில் நிதிகளை வசூலித்துக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். அதேபோல எங்கள் ஒன்று இரண்டு போராளிகளை அழைத்து சிறு உதவியை கொடுத்து வீடியோ எடுத்து போராளிகளை அவமானப்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர். இது போன்ற பல பிரச்சனைகளை கண்முன் பார்க்கின்றோம்.
கருணா அம்மான் என பெயர் வருவதற்கு காரணமே தலைவர் பிரபாகரன் தான். அவருடன் கிட்டத்தட்ட 22 வருட காலமாக பற்றுவைத்து பயணித்தவன் அந்த அடிப்படையில் இன்றும் எனது அடிமனதில் அவரின் எண்ணங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனை மறுக்கமுடியாது எனவே இதனை மனதில் வைத்துக் கொண்டு சிறந்த முறையில் எங்கள் போராளிளை வாழ வைக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.
இன்று அமைச்சர்கள் இருந்தாலும் ஊழல்கள் வீதி அபிவிருத்தி என்ற போர்வையில் 20 வீதம் தரகு பணம் ஒப்பந்தகாரர்கள் கொடுக்க வேண்டும், இது தான் வீதி அபிவிருத்தி இது போன்று பல பிரச்சனைகள் நிறைய இடங்களில் இடம்பெறுகின்றது.
அம்மான் படையணி என்று ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வாழ்வாதாரம் அற்று சிதறி கிடக்கும் போராளிகளை கவனித்து அவர்களை ஒரு பலமான முறையில் ஒருங்கிணைத்தால் மாத்திரம் தான் உலகத்தின் கவனம் திரும்பும் அதற்காக இந்த கட்டமைப்பை உருவாக்கினேன் எதிர்காலத்தை சிறந்த முறையில் திட்டமிட்டுள்ளோம்
திறமை பெற்ற போராளிகள் பாராளுமன்றம் போக வேண்டும் பிரதேச சபை மாகாண சபையில் பங்குபற்ற வேண்டும் என்ற அடிப்படையில் சென்றால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
தமிழ் பெரும் தலைவர் சம்பந்தன் ஜயா அவரை மறக்க முடியாது. தலைவருடன் இந்தியாவில் இருக்கின்ற போது நானும் தலைவரும் அடிக்கடி சம்பந்தன் ஜயாவையும் மாவையையும் சென்று சந்திப்போம். அவர் தமிழர்களின் உரிமையை வெல்வதற்காக தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த ஒரு மாமனிதர் அவரை மதிக்க வேண்டும் அவருடைய இழப்பு மாபெரும் இழப்பு, அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை கட்சி சார்பில் தெரிவிக்கின்றேன்.
இன்று தமிழரசு கட்சிக்குள் பதவிக்கு போட்டி இடம்பெற்று வருகின்றது. பதவிகேட்டு வழக்கு வைத்திருக்கின்றனர் சுமந்திரன் ஒரு பக்கம் சிறிதரன் ஒரு பக்கம் ஆகவே அவர்கள் சிதறவாய்பு இருக்கின்றது. தமிழ் மக்களுக்காக உலகம் முழுக்கச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரே ஒருவனும் நான் தான், தமிழ் மக்களுக்காக ஒரு யுத்தம் செய்த ஒரே ஒரு தளபதியாக இருப்பவனும் நான் தான்.
எனவே எங்களுடன் இணையுங்கள் எங்களுக்கு அனுபவம் உணர்வு இருக்கின்றது. தமிழ் மக்கள் மீது பற்று இருக்கின்றது எனவே அனைவரும் இணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களை சிறந்த ஒரு கௌரவ இனமாக வாழவைக்கலாம் என்றார்.





