சிறப்பாக இடம்பெற்ற மடு பிரதேச செயலக கலை பண்பாட்டுப் பெருவிழா.
மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா இன்று (22) வியாழக்கிழமை மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
மடு பிரதேச செயலாளர் கீ .பீட் .நிஜாகரன் தலைமையில் மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க .கனகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும் ,வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வொலன்ரைன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
காலை 9.15 மணி அளவில் விருந்தினர்கள் குடை கொடி ஆலவட்டம் கோலாட்டம் கும்மி, நடனம், பூரண, கும்பம் தாங்கிய மகளிர் மற்றும் தமிழ் வளர்த்த சான்றோர்களின் வேடப்புனைவாளர்கள் சகிதம் சம்பிரதாய பூர்வமாக வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் மடு பிரதேச செயலாளர் தலைமையில் அமரர் செல்லன் மாதவன் அரங்கில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வரவேற்புரையை உதவி பிரதேச செயலாளர் செல்வி ஜம்யுதா பூவிலிங்கம் நிகழ்த்தினார் .மூன்று கலைஞர்கள் நிகழ்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தமது உரையில் கலை நிகழ்வுகளின் சிறப்பு பற்றியும் அழைப்பிதழில் குறிப்பிட்டவாறு நேர முகாமைத்துவம் கடைப் பிடிக்கப்பட்டமை தொடர்பிலும் பாராட்டி உரையாற்றினார்.
கலைஞர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலை மன்ற உறுப்பினர்கள் மாணவர்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாறான சிறப்பானதும் ஒழுங்கமைக்கப்பட்ட துமான விழா ஒன்றை மடு பிரதேசத்தில் காண முடிந்ததாக பலரும் கருத்து வெளியிட்டனர்.