ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அதன் ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளால் அழித்துக் கொண்டு செல்கின்றது எனவே தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், இல்லாவிட்டால் எமது மக்களின் எதிர்காலம் சூனியமாகும் என முன்னாள் நா.உ. ரெலோ கட்சியின் செயலாளரும் சங்கு சின்ன வேட்பாளருமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற ஊடக சந்த்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட எனக்கும் எனது குழுவினருக்கும் ஆதரவு நல்கிய தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.
இது எமக்கு தோல்வி அல்ல எமக்கு ஏற்பட்ட சிறு சறுக்கலே ஆகும். இந்த சறுக்கலில் இருந்து பாடம் கற்று மீள் எழுச்சி பெறுவது எங்களது நோக்கமாகும். ஒரு காலத்தில் ஆட்சி செய்த தேசிய கட்சிகளே அடுத்த தேர்தலில் தோல்வி கண்ட வரலாறுகள் இருக்கின்றது.
1970ம் ஆண்டு ஆட்சி செய்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 1977 ம் ஆண்டு வெறும் 8 ஆசனங்களுடன் பாராளுமன்றம் சென்ற வரலாறு இருக்கின்றது. அதேபோன்று 2020 ம் ஆண்டு 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தேசிய மக்கள் சத்தி (ஜே.வி.பி) இன்று 159 ஆசனங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலாக ஆட்சி அமைத்த வரலாறும் இருக்கின்றது.
எனவே எமக்கு இது தோல்வி அல்ல அடுத்த வெற்றிக்கான பலமான வலுவான அத்திவாரத்தை இடும் ஒரு வாய்ப்பாகத்தான் இதனை பார்க்கின்றோம். எமது இலக்கு நோக்கிய இலட்சிய பயணம் எட்டும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தோல்வியில் துவழ்வது வரலாறு எம்போன்ற போராளிகளுக்கு எப்பவும் இருந்ததில்லை தோல்வியை வெற்றியாக்குவது தான் எங்களது இலட்சியம், அந்த இலட்சியம் தொடர்ந்து கொண்டே இருக்கும் வடக்கு கிழக்கிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட்டது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காக இணைந்து போட்டியிட்டோம் அந்த வகையில் எங்களுக்கு கணிசமானளவு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் தேசியம் விட்டுப்போகும் என்பதை சிந்தித்து அனைவரும் செயற்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் தேசியத்துடனும் தமிழ் மக்களுடனும் தமிழ் கட்சிகளுடனும் நேரடியான மோதலிலே ஈடுபட்டனர். அதேபோன்று அவர்களது ஆட்சி வேறு விதமாக இருந்தது
ஆனால் தற்போது ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அதன் ஜனாதிபதி அந்த கட்சி தமிழ் தேசியத்தையும் தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் கறையான் அரிப்பது போன்று உள்ளால் அழித்துக் கொண்டு செல்கின்றது. எனவே எங்களது மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் நாங்கள் எங்களுக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் இல்லாவிட்டால் எமது மக்களின் எதிர்காலம் சூனியமாகும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னம் வடக்கில் மாத்திரம் அல்ல கிழக்கிலும் கணிசமான வாக்குகளை பெற்றது குறிப்பாக மட்டக்களப்பில் 37 ஆயிரம் வாக்குகள் சங்கு சின்னத்துக்கு கிடைக்க பெற்றது. இந்த தேர்தலில் 14 ஆயித்துக்கு மேற்பட்ட வாக்குளை பெற்றிருக்கின்றது. இதற்கு பல காரணங்கள் உண்டு.
சங்கு சின்னத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட பா.அரியேந்திரன் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்படிப்பட்ட பல காரணங்களால் சங்கு சின்னத்துக்கு கிடைக்க வேண்டிய ஆதரவு கணிசமானளவு குறைந்துள்ளது
மாற்றம் முழுநாட்டிலும் ஏற்பட்டுள்ளது 3 ஆசனங்களுடன் இருந்த தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை பெற்றதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆயிரம் வாக்குளை பெற்றுள்ளதுடன் வடக்கு கிழக்கில் 12 ஆசனங்களை பெற்றுள்ளது .
அதேவேளை எதிர்வரும் தேர்தலில்களில் நான் போட்டியிடமாட்டேன் கடந்த தேர்தில் கூட நான் நடந்து முடிந்த இந்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்தேன் இருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து தமிழரசு கட்சி வெளியேறியதன் காரணமாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சிகளின் அழுத்தம் மற்றும் மட்டக்களப்பில் தலைமை தாங்கி செயற்பட வேண்டிய காரணமாக நான் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தேன்
இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமாட்டேன் அதேவேளை அரசியலில் இருந்து ஒதுங்கவும் மாட்டேன் தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன்
அந்தவகையில் கூட்டணியின் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் அனைத்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நன்றிகள் அதேவேளை மீண்டும் எம்மை ஆதரித்தோர் விமர்சித்தோர் எள்ளிநகையாடியோர் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள் என்றார்.





