சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஓமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.
இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.