கூடுதலான அதிகாரிகள் வவுனியா நகர் புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளத்தி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
செட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. நகர்புற பாடசாலைகள் பலவற்றில் மேலதிகமாக பல ஆசிரியர்கள் உள்ளனர். ஏன் நகர்புறப் பகுதியில் உள்ள ஆசிரியர்களை பின்தங்கிய பிரதேசத்திற்கு அனுப்ப முடியாமல் உள்ளது. செட்டிகுளம் பிரதேசத்தில் கடமையாற்றும் சில ஆசிரியர்கள் 8 வருடம் முடிந்தும் இடமாற்றம் வழங்கப்படாது உள்ளனர். ஆனால் நகர்புறப் பாடசாலைகளில் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் நகர்புற பாடசாலைகளுக்கே சுழற்சி முறையில் இடமாற்றமாகி செல்கின்றனர்.
ஏன் அந்த ஆசிரியர்களை தூரப் பிரதேசங்களுக்கு அனுப்ப கூடாது. தொடர்ச்சியாக தூரப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏன் விமோசனம் கொடுக்கக் கூடாது. இங்கு கூடுதலான அதிகாரிகள் நகர் புறத்தில் இருக்கும் ஆசிரியர்களை காப்பாற்றி செல்வாக்கை பயன்படுத்தி இடமாற்றங்களை வழங்குகின்றனர். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும்.
ஜனவரி 7 ஆம் திகதி வவுனியா தெற்கு வலயத்தின் உள்ளக இடமாற்றம் இடம்பெற இருக்கின்றது. அதில் இது தொடர்பில் கவனம் செலுத்தி சரியான முறையில் இடம்பெற வேண்டும். செட்டிகுளம் கோட்டத்தில் பாரிய ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுகின்றது. நகர்புறத்தில் தொடர்ந்தும் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்டு அந்த பற்றாக்குறையை நிரப்ப வேண்டும் எனக் கேட்கின்றேன். அத்துடன் இடமாற்றம் தொடர்பான விடயங்களையும் எம்மிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
வவுனியா தெற்கு வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான விபரத்தை தர வேண்டும். புதிதாக ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது. நாம் வடக்கு மாகாண ஆளுனருடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் பேசி இங்குள்ள ஆசிரியர் பறறாக்குறையை நிரப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.