நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே பிரித்தானியா இந்த தடையை விதித்துள்ளது.
இது தொடர்பில் எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கலாநிதி தயான் ஜயதிலக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய நீதியமைச்சர் கெரி ஆனந்தசங்கரி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இன அழிப்பு இடம்பெற்றதாக கனேடிய நாடாளுமன்றில் யோசனை ஒன்றை முன்வைத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய அரசியல்வாதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் இராஜதந்திர ரீதியான தாக்குதலாகும். எனவே, இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய உயர்ஸ்தானிகளை அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.