கனடாவின் Windsor நகரத்தையும், அமெரிக்காவின் Detroit நகரத்தையும் இணைக்கும் Gordie Howe International Bridge பாலம் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது பாலம் திறக்கப்படுவதற்கு முன்பான இறுதிக்கட்ட சோதனைகள், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் நிர்வாக அனுமதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த திட்டம் சர்வதேச வாகன போக்குவரத்து திட்டமாக அமைந்துள்ளதுடன், 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி இந்த பாலத்தின் வேலைகள் நிறைவடைந்தாலும் “Testing and Commissioning” எனப்படும் இறுதிக்கட்ட செயல்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையில் நிலவிய வர்த்தக முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, பாலம் திறக்கப்படுவதை தற்காலிகமாகத் தடுக்கலாம் என அமெரிக்க அதிபர் Donald Trump, எச்சரித்திருந்தார். எனினும் கனடா மற்றும் மிச்சிகன் மாநில அதிகாரிகள், பாலம் இரு தரப்புக்கும் முக்கியமான பொருளாதாரத் திட்டம் என்றும் அது இறுதியில் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி, பாலம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள சுங்க வளாகங்கள், நெடுஞ்சாலை இணைப்புகள் ஆகிய அனைத்தும் நிறைவடையும் கட்டத்தில் உள்ளதுடன், இப்பாலத்தை அதிகாரப்பூர்வமாக திறப்பதற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், திட்டம் முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும், இறுதி அனுமதிகளுக்காக காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











