மொன்றியல் மாநகர சபைக்குச் சொந்தமான குடியிருப்பு வாகன நிறுத்த அனுமதிப்பத்திரங்களை போலியாகத் தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் முதல் 2024 செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே, அவர் இக்குற்றச் செயலைப் புரிந்துள்ளார்.
மொன்றியலின் பிரத்யேக குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தப் பயன்படும் ‘விக்னெட்ஸ்‘ (Vignettes) எனப்படும் ஸ்டிக்கர்களைப் போலியாக வடிவமைத்த அவர், அவற்றை அதிகளவில் விற்பனையும் செய்துள்ளார்.
26 வயதுடைய இளைஞரான அவர் கியூபெக்கின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (CLCC) தீவிர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட போதிலும், நீதிமன்றம் இவருக்கு நிபந்தனையுடனான விடுதலையை (Conditional Discharge) வழங்கியுள்ளது.
இதனால், அவர் எவ்வித குற்றப் பதிவுகளும் (Criminal Record) இன்றி தப்பியுள்ளார் என்று கூறப்படுகின்றது.
எனினும், அந்த இளைஞர் மீது 18 மாத கால நன்னடத்தைக் கண்காணிப்பும், சமூக சேவை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.











