மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்று, சுகாதார அதிகாரிகளால் இன்று (23) மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின்போது சுகாதார சீர்கேடுகள் உடன் இயக்கியமை கண்டறியப்பட்டு, உடனடியாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி(MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், குறித்த வடை தயாரிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த நிலையத்தில் உணவுப் பொருட்கள் மனித பயன்பாட்டிற்கு ஒவ்வாத வகையிலும், மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.
குறிப்பாக உணவு தயாரிக்கும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டது, கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் சுகாதார பாதுகாப்பின்றி தேங்கியிருந்தது, கோழிகள், புறாக்கள் மற்றும் ஏனைய செல்லப்பிராணிகள் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரித்தமை,உணவு தயாரிக்கும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.போன்ற குறைபாடுகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகள் நிறுத்துமாறு உரிமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
சுகாதாரத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து, இடத்தை சுத்தப்படுத்தி, சுகாதாரமான முறையில் மீள் அனுமதி பெறும் வரை நிலையத்தை இயங்க செய்ய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த திடீர் ஆய்வு நடவடிக்கைக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.











