தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையத் தயாராக இருப்பதாக வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உச்சமடைந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற இரு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டு கூட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது இந்த உத்திசார் கூட்டணியில் இணைய விரும்புவதாக வங்கதேச பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சொந்த பாதுகாப்பு, வணிக மேம்பாடு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, தனது பாரம்பரிய நட்பு நாடான இந்தியாவுடனான ராஜதந்திர உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், வங்கதேசம் சர்வதேச அளவில் புதிய கூட்டாளிகளைத் தேடி வருகிறது.
ஏற்கெனவே பாகிஸ்தானுடன் வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை அதிகரித்து வரும் வங்கதேசம், சீனாவுடனும் தனது பிணைப்பை வலுப்படுத்தி வருகிறது.
அணுஆயுத பலம் கொண்ட பாகிஸ்தான், மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் மிகப்பெரிய நேட்டோ ராணுவத்தைக் கொண்ட துருக்கி, வலுவான நிதி ஆதிக்கம் படைத்த சவுதி அரேபியா ஆகிய முப்பெரும் சக்திகளுடன் வங்கதேசம் கரம்கோர்க்க முற்படுவது பிராந்திய அரசியலில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.











