சத்தீஸ்கர் மாநிலம், தெளண்டி லோஹாரா பகுதியில் ‘மஹ்தாரி வந்தன்’ திட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போஜ்ராஜ் நாக் பேசிய பேச்சு புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்துகொள்ளவிருந்த இந்த விழாவிற்கு முன்பாக வானிலை மோசமடைந்ததாகவும், மழை பெய்து நிகழ்ச்சி தடைப் படாமல் இருக்க தாம் கடவுளிடம் பிரார்த்தித்து ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பாஜக எம்.பி-யின் இந்த மூடநம்பிக்கை சார்ந்த கருத்து குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி மழையையே நிறுத்த முடியும் என்றால், அதே வழியைப் பயன்படுத்தி பாஜக எம்.பி நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை விலை உயர்வையும் பணவீக்கத்தையும் குறைக்க ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டலாமே” என நையாண்டியாக சாடியுள்ளார்.
அறிவியல் யுகத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் பொதுவெளியில் மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறான முன்னுதாரணம் எனச் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.











