சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் தொடர்பில் அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல பகுதிகளில், “வான்வழி அச்சுறுத்தல்” இருப்பதாக எச்சரிக்கை செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ரியாத்தில் இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள பிராந்திய மோதல்களின் பின்னர், இவ்வாறு அவசர வான்வழி எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் ரியாத் நகரில் குறைந்தது ஒரு வெடிப்பு போன்ற சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ரியாத் விமான நிலையத்திற்கு அருகில் கரும்புகை எழுவதையும் தீப்பிழம்புகள் தென்பட்டதையும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த வெடிப்பு மற்றும் புகை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதனையும் வெளியிடவில்லை.
அதேவேளை, எச்சரிக்கைகள் பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்புடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ள பின்னணியிலேயே இந்த புதிய வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா ஏற்கனவே ஹூதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்ததாக தெரிவித்துள்ள நிலையில், தற்போதைய சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.











