இது பற்றி தெரிய வருவதாவது,
மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் போலி தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடைவு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என சோதனையில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து தங்க ஆபரணங்களை அடைவு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கைது செய்து விசாரித்த போது போலி தங்க ஆபரணங்களை அவரது கணவர் வடிவமைத்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்ததுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகி வந்த போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து வருபவரை பொலிசார் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் மதுபான கடை ஒன்றில் மது அருந்தி கொண்டிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, சம்பவ தினமான நேற்று மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விக்னேஷ் உட்பட குழுவினர் சம்பவ தினமான நேற்று குறித்த மதுபானம் இருந்தும் கடையை முற்றுகையிட்டு கைது செய்தனார்.
இதில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் எனவும் தங்க ஆபரணங்கள் வடிவமைப்பு செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிசார், அவரிடம் இருந்து தங்க ஆபரணங்களை வடிவமைக்கும் உபகரணங்களை மீட்டதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.











