மட்டக்களப்பு கரடியனாற்றில் வயல் பகுதியை அண்டிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை, சோதனை செய்ய சென்ற பொலிசாருக்கு கடமையை செய்ய விடாது தடுத்த மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) இரவு கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் சம்பவ தினமான நேற்று இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரு பொலிசார் சிவில் உடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போது, வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக நிறுத்தி இருப்பதை கண்டு அதனை பரிசோதனை செய்வதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சென்ற நிலையில் அங்கு இருந்த பொதுமக்கள் ஒன்று கூறியதையடுத்து பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டதையடுத்து குறித்த பொலிசார் மேலதிகாரியின் சுவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.டி.எஸ். திசநாயக்க மேலதிக பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பங்குடாவெளியைச் சேர்ந்த 55 வயது, 25 வயது, 31 வயதுடைய 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.











