அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தானாகவே கிடைக்கும் குடியுரிமை உரிமையைக் கட்டுப்படுத்தவும், ‘பிறப்புச் சுற்றுலா’ (Birth Tourism) முறையைத் தடுக்கவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை மறுக்கும் டிரம்பின் முதல் முயற்சியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து ஓவல் அலுவலகத்தில் கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்குத் துரதிர்ஷ்டவசமான தீர்ப்பு கிடைத்ததாகவும், அதனால் தங்களது சட்ட நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்து மீண்டும் புதிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிறப்புரிமை குடியுரிமை முறை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சாடினார்.
முதல் உத்தரவின் மூலம், தானாகக் குடியுரிமை பெறத் தகுதியற்றவர்களின் வரம்பை அமெரிக்க நிர்வாகம் விரிவாக்கியுள்ளது. அதன்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு அரசாங்க ஊழியர்கள், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் மோசடி மூலம் குடியுரிமை பெற முயன்றவர்களின் குழந்தைகளுக்கு இனி தானாகப் பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்பட மாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது உத்தரவு, ‘பிறப்புச் சுற்றுலா’ என்ற நடைமுறையைக் குறிவைக்கிறது. அமெரிக்காவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்து, இங்கு குழந்தையைப் பெற்றெடுத்து அதன் மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெறும் நோக்கத்துடன் செயல்படும் நபர்கள் மற்றும் அவர்களை அழைத்து வரும் முகவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிக்க இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
டிரம்பின் இந்த புதிய உத்தரவுகளும் அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்திற்கு எதிரானது என்று மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் (ACLU) அமைப்பு, இந்த உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த புதிய உத்தரவுகளும் விரைவில் சட்டச் சிக்கலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.











