பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக திடீரெனப் பரவிய காட்டுத்தீ பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ச்சியான கடும் வெயிலால் காடுகள் அனைத்தும் வறண்டு காணப்பட்ட சூழலில், லேண்ட்ஸ் மாகாணத்தில் திடீரெனப் பற்றிக்கொண்ட தீ மிக வேகமாக சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்குப் பரவியது.
இதுவரை சுமார் 1,100 ஹெக்டேருக்கும் அதிகமான காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் பாதுகாப்பைக் கருதி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் ‘லாண்டஸ் டி காஸ்கோக்னே’ இயற்கை பூங்காவிற்கு உட்பட்ட ‘லுக்லான்’ கிராமத்தை நோக்கி தீப்பொறிகள் எழும்பியதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இருப்பினும், களத்தில் இறங்கிய 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிநவீன வாகனங்களின் உதவியோடு, இரவு முழுவதும் போராடி தீ கிராமத்திற்குள் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதமும் குடியிருப்புச் சேதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
இருப்பினும், மதிய நேரத்தில் வெப்பநிலை மீண்டும் 36 டிகிரி செல்சியஸை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அணைக்கப்பட்ட தீ மீண்டும் பற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு அப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ சம்பவங்களில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், அடுத்த 15 மணி நேரம் மீட்புக் குழுவினருக்கு மிகவும் சவாலான கட்டமாக இருக்கும் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.











