சீனாவின் வட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருவர், அங்கிருந்த 4 சென்டிமீட்டர் நீளமும் 50 கிராம் எடையும்கொண்ட சிறிய தங்கக் கட்டியைத் தவறுதலாக விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகச் சிறுமியைச் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்குப் போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக பெய்ஜிங் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சிறுமி மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்-ரே சோதனை மூலம் அவரது இரைப்பைக் குழியில் தங்கக் கட்டி சிக்கியிருப்பதை உறுதி செய்தனர்.
கனமாகவும் வழுவழுப்பாகவும் இருந்த அந்த தங்கக் கட்டி, வயிற்றின் உள்சவ்வைக்கீறி கடுமையான உள் இரத்தப்போக்கு மற்றும் உறுப்புகளில் துளைகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள், உடனடியாக சிறப்பு கருவியுடன் கூடிய எண்டோஸ்கோபி முறையைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சை ஏதுமின்றி சில நிமிடங்களிலேயே அந்தத் தங்கக் கட்டியை வெளியே எடுத்தனர்.
தற்போது சிறுமி முழுமையாகக் குணமடைந்து நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் இதுபோன்ற ஆபத்தான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைக்கக் கூடாது எனப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.











