தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் சூழலில், அதைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு மெத்தனப் போக்கைக் காட்டி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கும், கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதாரத்துறையும் உடனடியாக மேற்கொள்ளத் தவறிவிட்டதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போக்கை அரசு கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என அவர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.











