அம்பாறை இகினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள வாவின்ன பரகஹகலே பிரதேசத்தில் upட ஒன்றினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) முற்றுகையிட்ட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு விசேட அதிரடிப்படையினர் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ ரக தானியங்கி கைத்துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டா மெகசீன்கள் மற்றும் ஆயுதங்களை சுத்தம் செய்யும் கருவியை மீட்டதுடன் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் பணிப்புரையின் கீழ் அம்பாறை வலய கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. குணசிறியின் வழிகாட்டலில் அம்பாறை முகாமின் பதில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.சம்பத்குமார அம்பாறை விசேட அதிரடிப்படை முகாமின் பதில் முகாம் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் அமில நிரோஷன் ஜயசிங்க உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ். ரத்நாயக்க பொலிஸ் சார்ஜன்ட்டுகளான ஹேரத், ரத்நாயக்க ஜயசிங்க, மானலே, யசரத்ன, குணரத்ன, கொண்ட குழுவினர்
சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையின் போது வீட்டு காணியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த நிலையில் 9 எம்.எம் துப்பாக்கி மற்றும் 143 தோட்டாக்களை மீட்டதையடுத்து 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கைது செய்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கியின் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ சிறப்புப் படை வீரர் என்பதுடன் போர் நடைபெற்ற வேளை வடபகுதியில் கடமையாற்றி வந்துள்ளார் எனவும் அதன்போது இதனை எடுத்து கொண்டு வந்தாரா? அல்லது விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியா? அல்லது இராணுவ களஞ்சிய சாலையில் இருந்து பெறப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? அல்லது பல்வேறு குற்றச் செயலுக்காக எடுத்து வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? என பல கோணங்களில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிசார் தெரிவித்தனர்.





