அம்பாறை மொனராகலை எல்லைப் பகுதியான கராண்டுகல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாகியுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி சக பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்கு சென்று அவரை சுட்டுக் கொன்று விட்டு அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சென்று தாயாரும் மகளுமான இரு பெண்களை சுட்டு கொன்றுவிட்டு தனக்குத்தானே துப்பாகியில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது
இது பற்றி தெரிய வருவதாவது
மொனராகலை மாவட்ட பொலிஸ் பிரிலுள்ள அம்பாறை பிபிலை வீதியிலுள்ள கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் துசிரகுமார சம்பவதினமான சனிக்கிழமை இரவு கடமையை பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கியுடன் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாலையில் தனது ரி56 ரக துப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒருவருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வெளியேறி அவருடன் கடமையாற்றி வந்த நாமல் ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் லஹிரு உதார வீட்டிற்கு சென்று அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து அவர் மீது துப்பாக்கி சூட்டை நடாத்தி அவரை கொன்றுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறி நாமல் ஓயாவில் இருந்து 3 கிலோமீற்றர் தூரம் கொண்ட நெல்லிகலை என்ற பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றினுள் சென்று அங்கிருந்த 54 வயதுடைய பெண் ஒருவரையும் அவரது 17 வயதுடைய மகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து வெளியேறி மீண்டும் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனக்கு தானே அந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இரு சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுன் துப்பாக்கி சூடு நடாத்திய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும் இடையே ஏற்பட்ட குரோதம் காரணமாகவும் அதேவேளை காணி பிரச்சனை காரணமாக இரு பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மொனராகலை மாவட்ட பொலிஸ் தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











