கண்டி, அங்கும்புர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில் மருமகனால் கீழே தள்ளிவிடப்பட்ட மாமியார் காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கண்டி வீதி, கல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய மாமியாரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று உயிரிழந்த மாமியாருக்கும் அவரது மருமகனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபரான மருமகன் தனது மாமியாரை கீழே தள்ளிவிட்டுள்ள நிலையில் அருகிலிருந்த கொங்கிரீட் தூணில் மோதி மாமியார் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாமியார் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, சந்தேக நபரான 33 வயதுடைய மருமகன் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











