இதுவரை சிங்களபௌத்த பேரினவாதத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் தொடர்ச்சியாக இருந்திருக்கிறோம்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வீதிகளில் இருந்த எங்களை எதிர்க்கட்சியாக பாராளுமன்றில் அமர்த்துமாறு மக்கள் போராட்ட முன்னணியின் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளர் நி.பிரதீபன் தெரிவித்தார்.
மக்கள் போராட்ட முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
நாட்டின் இறைமை மற்றும் தேசியஇனப்பிரச்சனைக்கான தீர்வு,மதச்சார்பற்றநாடு, தேசியஉற்பத்தி இவற்றினை மையமாகவைத்து மக்கள் போராட்டமுன்னணியாக இந்ததேர்தலில் நிற்கிறோம்.
நாங்கள் ஒடுக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். தமிழ்தேசிய அரசியலில் இருப்பவர்கள் தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களிடம் வருபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் மக்கள் சார்பான பிரச்சனையில் உரிய எதிர்த்தரப்பாக இருந்து குரல் கொடுக்கவில்லை என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இன்று தமிழ்ச்சமூகம் எதிர்நோக்க கூடிய நெருக்கடிகள் பல இருக்கின்றன. இந்திய றோலர் படகுகளின் அத்துமீறல் பாரிய பிரச்சனையாக இருக்கிறது.
இருநாட்டு மீனவர்களுக்கும் எமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .அதனை தொப்புள்கொடி உறவாகவே நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் றோலர் படகுகளின் அத்துமீறலானது எதிர்காலத்தில் வடபுலத்தில் இருக்க கூடிய மீன் வளத்தை அழிக்கும் நிலமைக்கே வித்திடும். இந்தவிடயம் தொடர்பாக அரசாங்கம் மற்றும் இந்தியத்தரப்புகள் பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருகிறது. அந்த ஒப்பந்தம் அமுல் படுத்தப்பட்டால் எமது 2 இலட்சம் மீனவர்கள் வீதிக்கு வரும் நிலையே ஏற்ப்படும்.
இதுவரையான காலப்பகுதிவரை சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு நாம் தொடர்ச்சியாக சிம்மசொப்பனமான முறையில் மக்கள் போராட்டங்களில் இருந்திருக்கிறோம். வளங்களை அந்நிய சக்திகளுக்கு விற்கமுற்ப்படும் போது அதனை கடுமையாக எதிர்த்திருக்கின்றோம்.
அந்தவகையில் மக்களின் குரலாக வீதிகளில் இருந்த எங்களை எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் மக்கள் ஏன் அமர்த்தக்கூடாது என்பதை கேட்கவிரும்புகின்றோம். இனமதமொழி பிரதேசம் கடந்து எமது கரங்கள் இந்த மக்களுக்காக உயர்ந்திருக்கின்றது. இரட்டைவேடம் எம்மிடம் இல்லை.
இன்று காசுக்கும் சாராயத்தையும்நம்பி பலர் பிரச்சாரம் செய்கின்றனர்.இவர்களுக்கு கொள்கைகளும் இல்லை .இலக்கும் இல்லை.
எனவே எதிர்க்கட்சியாக பாராளுமன்றில் எமது குரல் ஒலிக்கும் போது மக்களின் நலன்களை இன்னும் வேகமாக முன்னிறுத்தி கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என்றார்











