முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக கிராமமான ஆண்டான் குளம் கிராமத்தின் குறைபாடுகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று கேட்டறிந்ததுடன், ஆண்டான் குளம் ஆதி ஐயனார் ஆலயத்தில் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.
குறித்த ஆண்டான்குளம் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது வரையில் அவர்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இருப்பினும் அங்குள்ள தமது விவசாய நிலங்களில் தமிழ்மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன், கால்நடைவளர்ப்பு, நன்னீர் மீன்பிடி போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில் குறித்த பகுதியில் விவசாய, கால்நடைவளர்ப்பு, நன்னீர்மீன்பிடி போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் மக்களுடைய இடர்பாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்தார்.
குறிப்பாக குமுழமுனை நாகதம்பிரான் ஆலய சந்தியிலிருந்து, ஆண்டான்குளம் ஐயனார் கோவில்வரையிலான வீதிமற்றும், குறித்த வீதியில் இருக்கும் இரண்டு பாலங்கள் சீரின்றிக் காணப்படுகின்றது.
அத்தோடு ஆண்டான்குளத்திலிருந்து நித்தகைக்குளம் வரையிலான வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரியவெளி, ஆத்தங்கடவை, ஆண்டான்குளம், விண்ணாங்கம்வெளி, நித்தகைக்குளம், ஆலடிக்குளம், படலைக்கல்லு, திருக்கோணம்வயல், பூவரசம்வெளி ஆகிய வயல் நிலங்களில் சுமார் 2000ஏக்கருக்கும்மேல் நெற்பயிற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக விவசாயத்திற்கான உள்ளீடுகளைக் கொண்டு செல்லும் போதும், வயல் காவலுக்கு செல்லும் போதும், அறுவடையின் பின்னர் நெல்லைக் கொண்டுவருவதிலும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
அதேபோல் அப்பகுதியிலுள்ள கால்நடைவளர்ப்பாளர்களும், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இவ்வாறான போக்குவரத்து சிக்கல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் குறித்த வீதிகளையும், பாலங்களையும் சீரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்களால் பாரளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந் நிலையில் அப்பகுதிய மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆண்டான்குளம் பகுதி மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பிலும் தம்மால் கூடிய கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.











