சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள மனோ கணேசன், இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மானுடன் நரேந்திர மோடி நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால், அந்த உறவை பயன்படுத்தி அனோஜனுக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இந்தியப் பிரதமர் ஊடாக சவூதி அரசாங்கத்திடம் மனிதாபிமான அடிப்படையில் தலையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











