யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் இயற்கையாக வளர்ந்திருந்த சம்பு புல்லில் தீடீர் தீ பற்றிய நிலையில் 2:30 மணி நேர முயற்சியில் தீ கட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.
இன்று பிற்பகல் 7:00 மணியளவில் கற்கோவளம் கடற்கரை பகுதியில் கரையோரமாக வளர்ந்துள்ள சம்பு புற் தொடர் பகுதியில் தீப் பரவியது தொடர்பாக பிரதேச மக்களால் வட்டார பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் பருத்தித்துறை பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் தெரிவித்திருந்தார்.
இதன்படி தீயை அணைப்பதற்காக தண்ணீர் தாங்கிகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் உடனடியாக பிரதேச சபையின் செயலாளர் தண்ணீர் தாங்கியை அனுப்பியுள்ளார்.
இந் நிலையில் பிரதேச மக்களுடன் சேர்ந்து பிரதேச உறுப்பினரும், பிரதேச சபை ஊழியரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை வடமாராட்சி வடக்கு பிரதேச செயலாளருடனும் தொடர்பு கொண்ட பிரதேச உறுப்பினர் அவரிடமும் உதவி கோரியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு கிராம சேவகரும் சென்றிருந்தார்.
இதில் பொதுமக்களும், பருத்தித்துறை பொலீசாரும் சேர்ந்து தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் கடற்படையினரும் தங்களுடைய நீர் தாங்கியை கொண்டு சென்று தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தீயை முழுமையான கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்துள்ளனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்த நிலைமைகளை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கு வடமராட்சி பிரதேசத்திற்கு நிரந்தர தீயணைப்பு வாகனம் ஒன்று அவசியமாக தேவைப்படுவதனால் தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் கோரிக்கை விடுத்துள்ளார்.











