மொண்ட்ரியல் நகரில் உள்ள மில்டன் பார்க் (Milton Park) மற்றும் பார்க் அவென்யூ (Park Avenue) சந்திப்புப் பகுதியில் நிலவி வரும் வீடற்றோர் (Homelessness) பிரச்சினை, கடந்த ஆண்டுகளில் விவரிக்கப்பட்ட “மனிதநேய நெருக்கடியை” விட, தற்போது மேலும் பலமடங்கு மோசமடைந்துள்ளதாக, எச்சரிக்கப்பட்டுள்ளது
மொண்ட்ரியல் நகரத்தின் ஓம்புட்ஸ்மேன் நடின் மெய்லக்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் பழங்குடி இன (Indigenous and Inuit) மக்கள் எதிர்கொள்ளும் மோசமான வாழ்வாதாரப் பின்னணியைச் சுட்டிக்காட்டி பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருந்த போதிலும், மொண்ட்ரியல் மாநகர நிர்வாகம் நிரந்தர உத்திகளை அமுல்படுத்தத் தவறியதால், இப்பகுதி தற்போது குற்றச்செயல்களின் மையமாக மாறியுள்ளதாக, ஓம்புட்ஸ்மேன் நடின் மெய்லக்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
மில்டன் பார்க் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் நடத்தப்பட்ட விரிவான கள ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த ‘பிளாட்டோ-மோண்ட்-ரொயால்’ (Plateau-Mont-Royal) மாவட்டத்தின் பரப்பளவில் மில்டன் பார்க் பகுதி வெறும் 10 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
ஆனால், ஒட்டுமொத்த மாவட்டத்தின் தனிநபர் மீதான வன்முறைக் குற்றங்களில் (Crimes against the person) 25 முதல் 30 சதவீதமான குற்றங்கள், இந்த மில்டன் பார்க் எனும் சிறிய பகுதியிலேயே பதிவாகின்றன என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.











