அல்பேர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவாக்கெடுப்பில் குடியேற்றம் தொடர்பான ஐந்து கேள்விகளுக்கும் மக்கள் ஆதரவாக வாக்களித்தால், தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அல்பேர்ட்டாவில் சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெறாதோர் வாழ்ந்து வருகின்றனர். புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், இவர்களுக்கு வழங்கப்படும் சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் குறைக்கப்படலாம் அல்லது கூடுதல் கட்டணங்கள் அறவிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்பேர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித், கனடாவிலிருந்து பிரிவதை ஆதரிக்கவில்லை என தெரிவித்திருந்தாலும், வாக்குச்சீட்டில் இடம்பெற்றுள்ள குடியேற்றம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மற்ற ஒன்பது கேள்விகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒட்டாவா மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே இந்த வாக்கெடுப்பு கேள்விகள் அமைந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்த வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்காலிக குடியிருப்பாளர்கள், அகதிகள், வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
எட்மண்டன் நகரைச் சேர்ந்த குடியேற்ற சட்டத்தரணி அவ்னிஷ் நந்தா, இந்த வாக்கெடுப்பு கேள்விகளில் பல தெளிவற்றவையாகவும், ஒன்றுக்கொன்று முரண்படும் வகையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த வாக்கெடுப்பின் உண்மையான விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே குழப்பநிலை தொடர்வதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.











